Tuesday, June 22, 2010

(நர்சிம்மைப்) பற்றியும் பற்றாமலும்

எவ்வளவு நல்ல விஷயமாக இருந்தாலும் ஒரு முடிவுக்கு வருவதென்பது தவிர்க்க முடியாதது தானே! அதனால்... நான் மீண்டும் எழுத வந்துவிட்டேன்.



முதலில் கனடா நாட்டுக்கு அலுவல் நிமித்தம் சென்றிருந்தேன். பிறகு விடுமுறைக்கு உத்தர்கான்ட் மாநிலத்தில் சில இடங்களுக்குச் சென்றிருந்தேன். அதனால் பல நாட்கள் தமிழ் இணையம் அருகிலேயே வர முடியாத இனிமையான சூழல். சாவகாசமான ஒரு சனி (என்ன ஒரு குறியீடு!) மாலையில் தமிழ்மணத்தைத் திறந்தால் ... மன்னிக்கவும் நெடி தாங்க முடியவில்லை. Pulp Fiction படம் பார்ப்பது போல் எந்தப் பதிவை முதலில் படிப்பது, எது அதற்கான எதிர்வினை என்று புரிந்து கொள்ள முடியாத சிக்கல். முதலில் ஆர்வமாக, பிறகு அதிர்ச்சியாக, மேலும் ஆபாசமாக முடிவில் ஆயாசமாக எல்லாவற்றையும் படித்து முடித்தேன்.


விரிவாகச் சொல்ல நிறைய இருந்தாலும், ஒன்றும் சொல்லாமல் இருப்பதே குறைந்த பாதிப்பு தருவதாக அமையும் என்று தோன்றுவதால் ஒன்றும் சொல்லப்போவதில்லை. கிடைக்கும் கெட்ட பெயர்களில் 'கள்ள மௌனம்' ஓரளவு பரவாயில்லை என்பதும் ஒரு காரணம். ஆயினும் ஒரு சில எண்ணங்களைச் சொல்ல வேண்டுமென்றும் தோன்றுவதால்:


நர்சிம் எழுதிய புனைவை மிக சிரமப்பட்டு தேடிக் கண்டுபிடித்துப் படித்தேன். மிகத் தரக் குறைவாக எழுதப்பட்டது. நிச்சயம் கண்டிக்கப் பட வேண்டிய எழுத்து. நான் அவருடைய 'நண்பர்கள்' பட்டியலில் இடம் பெறுபவன். ஆம், இன்றும் கூட. அதனால் அதற்கு உரிய அதிக பொறுப்பும் வெட்கமும் எனக்கும் இருக்கிறது. அவரிடம் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசினேன். எனது வருத்தத்தையும், வலுவான கண்டனங்களையும் தெரிவித்தேன். நான் பேசியபோது இருந்த நர்சிம் பெரிதாக சறுக்கியவர். ஆனால் அந்த வருத்தத்துடன் ஒரு நைந்து போன உள்ளத்தையும் உணர முடிந்தது.


வக்கிர எண்ணங்களே என்னிடம் இல்லை என்று சத்தியம் செய்யும் கனவான்களையும், நாரிமணிகளையும் நமஸ்கரித்து விட்டு விடுவோம். மீதமுள்ள பெரும்பாலோரான நமக்குள் ஆழ் மன வக்கிரங்கள் இருக்கத்தான் செய்யும் - பல சமயம் நமக்கே தெரியாமல். அவற்றை பிறரிடம் பேசும்போதே தவிர்த்து விடுதல் உசிதம். அதையும் மீறி பேசிவிட்டாலும், எழுதுவது என்பது ஒரு வழிப் பாதை. திரும்பப் பெற முடியாதது. அப்போது அதீத கவனம் தேவை. இவ்வாறு பேசுதல், பிறகு எழுதுதல் முதலிய காரியங்களுக்கு முன் வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சல்லடையில் போட்டு சலித்த பின்பே - குறிப்பாக கோபத்தின் வசத்தில் இருக்கையில் - வெளிக்கொணர்தல் கற்றோருக்கும், நாகரீகம் அறிந்தோருக்கும் அழகு. இந்த விஷயத்தில் நர்சிம் நம்ப முடியாத அளவுக்கு சறுக்கி இருக்கிறார். அதற்கான பலனாக வட்டியும் முதலுமாகப் பெற்றும் இருக்கிறார்.


மற்றபடி அவரை ரவுண்டு கட்டி அடித்த மற்ற எல்லா நல்லவர்களுக்கும்.... ஆத்மநாமின் இந்தக் கவிதையை சமர்ப்பிக்கிறேன்.

இந்த செருப்பைப்போல்
எத்தனைபேர் தேய்கிறார்களோ
இந்தக் குடையைப்போல்
எத்தனைபேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்தச் சட்டையைப்போல்
எத்தனைபேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி


இத்துடனாவது விட்டதற்கு


சரிந்து விழுந்த பிரபலங்கள், நட்புக்குப் புது இலக்கணம் வகுத்தவர்கள் மற்றும் வெற்றி கொண்ட புரச்சி வீரர்கள் நடுவே நான் வியந்தது மணிகண்டனின் அபாரமான, பாரபட்சமற்ற பின்னூட்டங்கள், கல்வெட்டு அவர்களின் 'நச்' கருத்துகள் மற்றும் 'அதுசரி' என்னும் பதிவரின் நேர்மையான கண்டனங்களும், அதற்குப் பின்பான வாதங்களும்.


இப்போதெல்லாம் தமிழ் வலைகளைப் படித்தாலே என் முகம் பீதியில் வெளிறுவதைக் கண்ட என் சகோதரனிடம் பேசிக்கொண்டே என் மனைவி கொடுத்த காபி கோப்பையை வழக்கம் போல அலட்சியமாக இடது கையில் வாங்கப் போனவன், கண நேரத்தில் சுதாரித்துக்கொண்டு பணிவுடன் இருகைகளிலும் கோப்பையைப் பெற்றுக்கொண்டேன். 'இன்னாபா மேட்டரு; அளவுக்கதிகமா அண்ணிய கும்புடற?' என்ற சகோதரனிடம் ஆணாதிக்கவாதிகளின் அபாயகரமான நிலையைச் சொல்லி அங்கலாய்த்தேன். அவன் 'என்னது? காப்பி நீ போடுவதில்லையா? உங்க தமிழ்மணத்தில் போட்டுக் கொடுக்கட்டுமா உண்மைகளை' என்று பயமுறுத்துகிறான். ஆமாம், புடவைகளைத் துவைக்க சிறந்த சோப்பு ஏரியலா சர்ஃப் எக்ஸல்லா பாஸ்?