Sunday, January 30, 2011

தமிழக மீனவர்களைக் காப்போம்




தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சுடுவது இப்போதெல்லாம் தினசரி செய்தி ஆகிவிடும் அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது.  ஈழப் போராட்டத்தின் உச்சத்தின் போதாவது மீனவர்கள் என்ற போர்வையில்  புலிகளுக்கு வேண்டியவற்றைக் கொண்டு சென்றவர்கள் என்று மீனவர்களைக் குருட்டுக் குற்றம் சாட்ட முடிந்தது. இன்றைய நிலையில் சிங்கள கடற்படை தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளுவதற்கு 'தமிழன்' என்ற அடையாளத்தின் மீதான வன்மம் மற்றும் காழ்ப்புணர்வு மட்டுமே காரணமாக இருக்க முடியும். எந்த அளவுக்கு இந்தியா தாழ்வுடன் பணிவுடன் இந்தக் கொலைகளை அனுமதிக்கிறது என்று சிங்கள அரசு கணித்துக் கொண்டும் இருக்க வேண்டும். 


ஈழப் போராட்டத்திலேயே இந்திய தேசத்தின் 'பொது நலனை' முன்னிட்டு, சிங்கள அரசுடன் கைகோர்த்து ஈழத் தமிழர்களின் வாழ்வையும், இந்தியத் தமிழர்களின் உணர்வையும் ஒரே நேரத்தில் இந்தியா தூரக் கடாசியது. இப்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழகத்தின் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மாநில அரசும் திடமான, தீவிரமான முடிவுகளை எடுக்க முன்வராதது இந்த எளிய மீனவ மக்களின் அவலமே. 


சரி, சாமானியர்களான நாம் என்ன செய்யலாம்? செய்ய முடியும்? ட்விட்டர் என்னும் ஊடகத்தின் மூலம் நிறைய தமிழர்கள் ஒரு குறிப்பிடத்தக்க அலையை, கவன ஈர்ப்பை கொண்டு வந்திருப்பதாகத் தெரிகிறது. நான் 'கீச்சு' (Twitter), 'முகப்புத்தகம்' (Facebook) போன்ற ஊடகங்களில் உறுப்பினராக இல்லாததால் தமிழ் இணையத்தில் இதன் தீவிரம் தெரிய வருவதற்கு எனக்கு தாமதம் ஆகியது. கூகிள் நிறுவனம் வழங்கும் 'பஸ்' (buzz) சேவையும் கிட்டத்தட்ட 'ட்விட்டர்', முகப்பத்தகம்' போன்ற வீச்சைக் கொண்டிருப்பதால், அங்கு நிறைய பதிவர்கள் மற்றும் பிற தமிழ் நண்பர்களின் ஒருமித்த வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. 

http://www.savetnfisherman.org/ என்னும் இந்தச் சுட்டியில் சென்று பார்த்தால் மேலதிக விவரங்கள் கிடைக்கும். ட்விட்டரில் சமீபத்திய டவிட்கள் (திட்டுகள் என்றும் சொல்லலாம்) காணப் பெறலாம். அதே தளத்தில் தமிழக மீனவர்களின் அவல நிலை பற்றிய கட்டுரைகளும் படிக்க வாய்ப்பு இருக்கிறது. 


முதல் படியாக http://www.petitiononline.com/TNfisher/ இந்த சுட்டியில் சென்றால் 'இணைய மனு' வில் உங்கள் பெயரையும் பகிர்ந்து கொள்ள முடியும். இதனை எழுதும் போது 1695 பேர் இந்த மனுவில் தம் பெயர்களைச் சேர்த்திருக்கிறார்கள். நானும் நேற்று இணைந்து கொண்டேன் (எண் 627). நீங்களும் இந்த சுலபமான செயலைக் குறைந்த பட்சம் செய்யலாமே- ப்ளீஸ்? 

நம் பதிவுலகிலேயே பல்வேறு அரசியல் கட்சியில் முக்கியப் பிரமுகர்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். ஒரு இலட்சம் பேர் இல்லாவிட்டாலும், ஒரு ஐம்பதாயிரம் பேராவது இந்த இணைய மனுவில் கையெழுத்து போட்டால் அரசியல் கட்சிகள் இதன் தீவிரத்தை உணர முடியும். இணையம் என்ற ஊடகத்தின் வலிமையை அனைவரும் உணரச் செய்யும், உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இது இருக்கும். 

அதனால் உங்களிடம் நான் கேட்பது இவை தான்:

1.   இந்த இணைய மனுவில் உங்கள் பெயரைச் சேர்த்துக்  கொள்ளுங்கள்
2.   நான் முதலில் குறிப்பிட்ட சுட்டிக்குச் (http://www.savetnfisherman.org/) சென்று தகவல் மற்றும் தற்போதைய நிலவரங்களை அறிந்து கொள்ளுங்கள் 
3.   உங்கள் நண்பர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் படி வேண்டுகோள் விடுங்கள். 
4.   ஊடகங்கள், அரசு மற்றும் அரசியல் கட்சி இவற்றுடன் நேரடித் தொடர்பு இருப்பவர்கள் இதனை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். 
5.   கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் கொடுங்கோலர்களுக்கு ஒரு முடிவோ அல்லது நல்ல புத்தியோ வரவேண்டுமென்று பிரார்த்தனை செய்யுங்கள்.  
  நன்றி.