Tuesday, January 10, 2012

அந்த நாள்



சூல் கொண்ட மேகங்களால்

தொலைந்து போன வானம்
மெல்ல விசும்புகிறது
வீசும் காற்றில்
தூரத்து மரங்கள்
கூச்சம் கொள்வதைக்
கண்ணாடிச் சுவர்கள்
விவரிக்கையிலேயே
வியர்க்கத் துவங்குகின்றன
நீண்ட வாலுடன்
வீங்கிய தலையுடன்
நீந்தியோடும் ஆயிரம் திவலைகளுக்கு
நான் நானாகும் முன்னே
ஓடிய ஓட்டத்தைச் சொல்கிறேன்
தோற்கும் திவலைகள் போலவே
அன்று வெல்லாதவைகள்
முதுகில் சுமந்தது
பெருக்கல் குறியா
அல்லது என்னைப்போல
பிரியும் சாலையா

[யாருமே பிரசுரம் செய்ய இயலாத கவிதை. இதுக்குத்தான் வலைப்பூ இருக்கணும்கறது]



Monday, January 2, 2012

தரிசனம்





பரிச்சயமற்ற நகரின்
பிரதான பெண்தெய்வத்தின்
தரிசனம் வேண்டுமென்றாள்
வயோதிகத்தால் நிதானமானவள்
என் கைப்பிடித்து நடந்தாள்
ஒரு முக்கிய நாற்சந்தியின்
ஏதோ ஒரு திருப்பத்தில்
திரண்டிருந்த மக்களுடன்
கடவுளை நெருங்குகையில்
வழி மாறியதை
உணர்ந்து கொண்டாள்
வேற்று மார்க்கத்தின்
பிரத்தியேக இறைவனை
குளிரூட்டும் பசுமையை
வேறு மனிதர்களை
சிறுமியின் ஆர்வத்துடன்
பார்த்தாள்.
தவறுக்கு வருந்தி
அவள் தெய்வத்திடம்
கூட்டிச் செல்ல விழைந்தேன்
பணிவாக மறுதலித்த
அவள் கண்களில்
மதங்களுக்கு முந்தைய
கடவுளுக்கு முன் பிறந்த
ஆதி மனுஷியின்
ஆனந்தமும் அமைதியும் கண்டேன்
பேருந்தில் திரும்புகையில்
கடவுளர்கள் சிறைப்பட்டிருந்த
கட்டிடங்களின் உச்சி விளக்குகள்
அணைந்து எரிந்து அளவளாவுவது
புரியத் தொடங்கியது அன்றுதான்

(நவீன விருட்சம் மின்னிதழில் பிரசுரம் ஆகியது)