Thursday, August 9, 2012

காக்கைச் சிறகு






திடீர்னு உள்ள வரச் சொல்லி கைல கடிதம் கொடுத்தார். தார் என்ன? தான். இவனுக்கு எல்லாம் மனசாட்சியே கெடயாதா? பதிமூணு பேர்ல நான் மட்டுந்தான் மாட்னேன். இந்த வருசமும் நோ போனஸ். நோ இன்க்ரிமென்ட். என்னங்கடா? அட்வைஸ் மழை வேற. என்னவோ PIP னு ஒரு ப்ரோக்ராம்ல போடட்டுமான்னு கேக்குறான். துப்பணும் போல வந்தது. சீட்டுக்கு வந்தா எல்லாரும் கருணையா பாக்குறாங்க. கொஞ்சம் அழுகையா வருது. போனஸ்/சம்பள உயர்வு இதெல்லாம் என்னப் பொருத்தவரைக்கும் பண விஷயம் இல்லை. தரமாட்டேன்னு சொல்வதில் ஒரு புறந்தள்ளல் இருக்கு. இன்னிக்கு இது போறும்னு கடைய மூடினேன். யார் கிட்டயும் 'பை' சொல்லாம வெளிய வந்தேன். ஒரு சிகரெட் பிடிக்கலாம்னு தோணிச்சு. இப்பெல்லாம் எங்க சுதந்திரமா சிகரட் பிடிக்க முடியுது? ஆபிஸ் நோ ஸ்மோகிங் ஆபிஸ். இப்ப நோ போனஸ் ஆபிஸ். நோ இன்க்ரிமென்ட் ஆபிஸ். ஐயோ வேணாமே இந்த ஆபிஸ் எழவு!


பாந்த்ராவில் எங்கேயோ போற டபுள் டக்கரில் ஏறி, மாடி ஜன்னலில் அமர்ந்தேன். என்னது? டபுள் டக்கர் இல்லையா? டெக்கரா? அது சரி. நொந்து போயிருக்கும் போது இதையெல்லாம் கவனமா சொல்ல முடியுமா? கலா நகர் சிக்னலில் நின்றது. பக்கத்தில்தான் பால் தாக்ரே வீடு. உடம்பு சரியில்லைன்னு லீலாவதில இருக்காராம். "இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்" னு சிரிக்கணும் போல இருக்கு. கண்டக்டர் 'புடே ஜா' னு எல்லாரையும் மராட்டியில் முன்னே விரட்டிக் கொண்டிருந்தான். முன்னேறி என்னடா செய்யப்போறோம்? இலேசா தூரத் தொடங்கியது. மொபைல் வெளிய எடுத்து பாட்டு கேக்க ஆரம்பிச்சேன். "மஞ்சள் வெய்யில் மாலையிட்ட பூவே". வாவ். அஸ்வினி நினைவுக்கு வந்தாள். என்ன மாதிரி முகம்! உடனே ஜானுவும். ஜானு.....இப்ப எப்படி இருப்பா? என்ன விட இரண்டு வயசு தானே கம்மி அவளுக்கு? முடி நரைத்திருக்கும். அந்த சுருள்? நிச்சயமா இன்னும் அதே ஒல்லியாதான் இருப்பா. இந்தப் பாட்டு 'கல்யாணி' தெரியுமா? அவதான் சொன்னா. அதுல வீணை நாதம் வரும்போது கண்ணை மூடிக்கொள்வா. அன்னிக்கு ஜெயாவோ விஜய்யோ.. ராஜா ட்ரூப்ல ஒரு பெண் வீணை வாசிக்கும் போஸ் நல்லா இருந்தது. கால தொங்கப் போட்டுக்கொண்டு வாசித்தாள். சரஸ்வதி இப்படித்தான் அமர்ந்து வாசிப்பாளோ! அவள் அமர்ந்திருந்த பலகை ஊஞ்சலாக மாறி ஆடினால் எப்படி இருக்கும்? வீணை வாசிச்சுக்கிட்டே, ஊஞ்சலில் ஆடிக்கொண்டே...

ஒருவருமற்று

ஒய்யாரமாய் ஆடுகிறது ஊஞ்சல்
அந்தரத்துக்கும் ஆகாயத்துக்குமாக.
கால்படாத பூமி
நழுவினாலென்ன?
இருந்தால்தான் என்ன?

இப்படி ஒரு ஒட்டுதலின்மையும் ஏகாந்தமும் வாய்க்கப் பெற வேண்டும். அதையும் தாண்டி பற்றற்ற நிலை வருமா? வரத்தான் வேண்டுமா? ஆமாம், ஜானு நீ ஏன் என்னைக் காதலிக்கவில்லை? அல்லது அப்படி சொல்லவாவது இல்லை? பாரு இப்படி ஆபிசில் நாறடிக்கும் போது, உன் மடியில் படுத்து அழணும் போல இருக்கு. முடியுமா? இல்ல முடியுமான்னேன்! உன் கணவன் கோவிச்சுப்பான். இல்ல கொலவெறில துரத்துவான். என்ன சிஸ்டம் இது? மனைவிக்குன்னு சில பழைய சிநேகிதர்கள் அட ஒரே ஒரு சிநேகிதனாவது இருக்கக் கூடாதா? எனக்கு மட்டும் கல்யாணம் ஆகியிருந்தா நிச்சயமா அலவ் பண்ணுவேன். பாரேன் இந்த ரோட்ல நிறைய குழிகள். அதில் நிறையும் குமிழிகள். இந்த மாதிரி என் மூஞ்சியின் குழிகள் எப்ப நிறையும் ஜானு? இந்த அம்மை முகமே நிறைய பேருக்கு அருவருப்போ எரிச்சலோ தருதோ! அதனால தான் போனஸ் தராமலும், காதலைச் சொல்லாமலும் புறக்கணிக்கிறாங்களோ !

ஆமா, ஏன் இந்த உலகம் காசு பணத்துக்கு இப்படி அலையணும்? ஜானு கைய்ய புடிச்சிகிட்டு 'தொடத் தொட மலர்ந்ததென்ன' கேட்பதை விட என்ன சுகம் இருக்க முடியும்! 'இடைவெளி தாண்டாதே; என் வசம் நானில்லை' னு கேக்கும் போதே சிலீர்னு இருக்குல்ல! பஸ் இப்ப பவாய் கிட்ட போயிட்டிருக்கு. அருமையான ஏரி. பெய்யும் மழையில் கண்ணாடித் தரை போல விரிந்து பரந்திருக்கு. ஏரிக்கு அந்தப் பக்கம் எத்தனை மரங்கள்! ஏரியில் முதலைகள் இருக்கு. அந்தப் பக்கம் நிறைய சிறுத்தைகள் கூட. பாம்புகள் கேக்கவே வேண்டாம். இதுங்களப் பார்த்து பயப்படும் மனுசப்பயலா பிறந்தேனே! இந்த மரமாவோ, இந்த நிலமாவோ இருந்தா, ஊர்ந்து செல்லும் பாம்பையும், தாவிச் சீறும் சிறுத்தையையும் சிரித்துக்கொண்டே மடியில் கொஞ்சுவேனே! ஒரு நாளு மண்ணோட மண்ணா ஆகிடுவேன். அப்பவாச்சும் குண்டும் குழியுமா இல்லாம சமவெளியா இருக்கணும். அப்பத்தான் மான்களுக்கும் என்னைப் பிடிக்கும்.

"ஒரு மரத்தடியில்
கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும்
வேர்கள் மேல் கிடக்கிறது ஒரு
மெல்லிய காக்கைச் சிறகு
அது சிறிய உடைவாளைப் போல் இருக்கிறது
அதைச் சில வினாடிகள் என் விலாப்புறத்தில் வைத்து
நானும் பறப்பதை, பகற்கனவு கண்டுகொள்கிறேன்
சட்டைப் பையில் வைத்தால் வெளியே தெரிந்து
விடும்போல் இருக்கிறது
கால் சராயில் வைத்தால் ஒடிந்துவிடுகிறது
இருப்பினும் என் பனியனில் போட்டுக்கொண்டு
திரும்புகிறேன்"

எங்கியோ சுத்தி ரூமுக்கு வந்து சேந்த போது பன்னண்டு மணி. டிவில ஒலிம்பிக்ஸ். குட்டி குட்டி பெண்கள் டென்ஷனா ஜிம்னாஸ்டிக்ஸ் பண்ணி, தோத்தாலும், வென்றாலும் அழுதாங்க. திட காத்திர ஆண்கள் நான் ஒரு க்ளாஸ் தண்ணி குடிப்பதற்குள் நூறு மீட்டர் ஓடி, கோடீஸ்வரர்கள் ஆகியிருந்தார்கள். அப்படியே தூங்கி விட்டேன். கனவில் குண்டு குண்டு பெண்கள் வலது கழுத்தில் பொடியைப் பூசிக்கொண்டு உலக்கைக் கைகளால் இரும்பு குண்டை தூர எறிந்து கொண்டே இருந்தார்கள். புல்வெளியெங்கும் குழிகள். கடைசியாக எறிந்தவளை இப்படி அழகான புல்வெளியை குழி குழியாக செய்வது நியாயமா என்றேன். குழிகள் ஆனாலும் புல்வெளி அழகுதான் என்று சொல்லிக்கொண்டே புல்வெளியில் புரண்டாள். ஜானு தான் இப்படி கனவில் குண்டுப்பெண்ணாக வந்திருப்பதைப் புரிந்து கொண்டே தூங்கி விட்டேன்.


ஆசுபத்திரியில் தாதி என் ஆடைகளை நீக்கி
பரிசோதனை செய்தபோது - மீண்டும் உதிர்ந்தது
எனது
உடைவாள் சிறகு
மேலும் கீழும் பறந்து
அங்கும் இங்கும் அலைந்து ...
நேற்று இன்றின் இரண்டு பக்கங்களிலும்



# நன்றி பெருந்தேவி மற்றும் தேவதச்சன்